காஞ்சிபுரத்தில் அன்னதானத்தை துவக்கி வைத்தார் துணை மேயர் குமரகுருநாதன்
காஞ்சிபுரத்தில் நாள்தோறும் அன்னதான திட்டத்தை துணை மேயர் குமரகுருநாதன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தினை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அன்னதான திட்டத்தின் கீழ் அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் தனியார் தொண்டு அறக்கட்டளை நிறுவனங்களும் நாள்தோறும் மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 365 நாட்களும் காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில் , மசூதிகள் , சர்ச் வளாகங்களில் மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டு கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி இத்திட்டம் துவங்கப்பட்டது.
நாள்தோறும் சூழற்சி முறையில் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ஜி.முருகேஷ் தலைமையில் 300வது நாள் விழா காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் எதிரே உள்ள ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில் முன்பு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுரு நாதன் பக்தர்களுக்கு உணவு வழங்கி இப்பணியினை துவக்கி வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒலிமுகமது பேட்டை தர்கா வளாகம் அருகே 100 பக்தர்களுக்கு அன்னதான உணவு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் பரணிதரன் மற்றும் கிழக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ஜி. முருகேஷ் கூறுகையில் , காஞ்சிபுரம் நகரில் வருகை தரும் பக்தர்கள் , முதியோர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து உணவளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப் பட்டதாகும். ஜூன் மாதம் 30ஆம் தேதி ஓராண்டு நிறைவு பெற்றாலும் இதனை தொடர்ந்து நடத்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.