உத்திரமேரூர் அருகே இடுப்பளவு நீரில் நீந்தி சென்று மூதாட்டி உடல் அடக்கம்
உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் தண்ணீரில் நீந்தி சென்று மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.
HIGHLIGHTS
உத்திரமேரூர் அருகே இறந்த மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்ய நீரில் நீந்தி சென்று அடக்கம் செய்யும் நிலையினை தவிர்க்க வரும் காலத்தில் சுடுகாடு பாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் , அனுமந்தண்டலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 120க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ள நிலையில் அனுமந்தண்டலம் காலனி பகுதிக்கு இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய போதிய சுடுகாட்டு பாதை இல்லை.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி உடல் நல குறைவினால் இறந்துள்ளார்.இவரது உடலை நல்லடக்கம் செய்ய போகும் வழியில் பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. மேலும் உத்திரமேரூர் ஏரிக்கு நீர் செல்லும் பெரிய கால்வாயை கடந்து அதன் பின் சுடுகாட்டுக்கு செல்லும் நிலையும் உள்ளது.
தற்போது செய்யாற்றின் குறுக்கே உள்ள அனுமந்தண்டலம் அணைக்கட்டிலிருந்து உத்திரமேரூர் ஏரிக்கு கால்வாயில் நீர் செல்லுவது வழக்கம்.தற்போது நீர் செல்லுவததால் இடுப்பளவு நீரில் நீந்தி உறவினர்கள் மூதாட்டியின் உடலை ஆபத்தான நிலையில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளனர்.
இந்த கால்வாயை கடக்கும் நிலையில் மதகின் ஷட்டர் அடைக்கப்பட்டு நீரின் வேகம் மற்றும் அளவு குறைந்த பின்னரே உடலை எடுத்துச் சென்ற நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் அனுமந்தடலம் காலனிக்கு நல்லடக்கம் செய்ய சரியான பாதை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். மூதாட்டின் உடலை சுமந்து செல்லும் நபர்கள் அவர்களுக்கு உதவியாகவும் இருவர் செல்ல வேண்டிய சூழ்நிலையிலும் ஆபத்தான முறையில் இந்த நல்லடக்கம் செய்யப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது விவசாய பணி குறைவு காரணமாக வயல்களில் இறங்கி செல்லும் நிலை உண்டானது. இல்லை என்றால் விளைவித்த பயிர்களை சேதப்படுத்தி தான் செல்லும் நிலை தொடர்ச்சியாக உள்ளது எனவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்நிலை நீடிப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு இவ்விடங்களை கண்காணித்து தேவையான உடல் நல்லடக்கம் இடத்தை தேர்வு செய்து பொதுமக்களின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சமத்துவபுரம் இடங்களை மேம்படுத்தி உருவாக்கும் தி.மு.க. அரசு , இது போன்ற அடித்தட்டு மக்களுக்கு உடல்நல அடக்கம் செய்ய இடம் உள்ளதா என ஆராயும் சிறப்பு கூறுகள் அமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் குடிசை வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வசித்த நபர் இருந்த நிலையில் அப்பகுதிக்கு சுடுகாடு இல்லை என்பதால் இரண்டு நாட்களுக்கு பிறகு தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.