விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்
காஞ்சிபுரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல்பரப்புரையின் போது தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கூட்டுறவுத்துறை தணிக்கை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தமிழக கூட்டுறவு துறைக்கு அனுப்பப்பட்டது.அதனடிப்படையில் விரைவில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் விவசாயிகளுக்கு அந்தந்த கூட்டுறவு சங்க செயலர்கள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 94 விவசாயிகளுக்கு 45 லட்சத்து 49 ஆயிரத்து 340 ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழ் இன்று கூட்டுறவு சங்க செயலர் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது .கடன் தள்ளுபடி சான்றிதழ் பெறப்பட்டது குறித்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.