திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.5லட்ச மதிப்பு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள ஒரு குடோனில் ரூ.5 லட்ச மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
திண்டுக்கல்-பழனி ரோடு, அஜிஸ்சாய்பு தெருவில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்த குடோனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் மேற்பார்வையில் மாநகர அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், கீதா, செல்வராணி, பாலமுருகன், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் பழனி ரோடு அஜிஸ் சாய்பு தெருவில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோட்டை குளம் ரோடு பகுதியில் நந்தி பிளாஸ்டிக் என்ற கடை வைத்திருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கேரிபேக்குகள், மெழுகு கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,
இதையடுத்து குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள் குடோன் நடத்தியவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த குடோன் வாடகைக்கு விட்ட கட்டிட உரிமையாளர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.