தர்மபுரியில் பொது வேலை நிறுத்த போராட்டத்தால் பஸ் வசதி இன்றி மக்கள் அவதி
தொழிற்சங்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தர்மபுரி மாவட்டத்தில் பஸ் வசதி இன்றி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் , பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும் , தொழிலாளர்கள் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் , புதிய பென்சன் திட்டம் ரத்து , வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் அளிக்க வேண்டும் , 100 நாட்கள் வேலை திட்டத்தை நகர்புறத்திற்கு நீட்டிக்க வேண்டும் , சம்யுக்த கிசான் மோர்ச்சா சங்க விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் , பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும் , சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஆஷா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மத்திய தொழிற்சங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
தருமபுரி போக்குவரத்து மண்டலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 போக்குவரத்து பணிமனைகளில், நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 840 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்றைய தொழிற்சங்களின் பொது வேலை நிறுத்த போராட்டத்தால், தருமபுரி போக்குவரத்து மண்டலத்தில், 25 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர் உள்ளிட்ட 6 பணிமனைகளில் 9 மணி நிலவரப்படி இயக்கப்படும் 205 பேருந்துகளில் 29 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அலுவலகங்கள், தினசரி வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.