அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
இந்த 20 மாணவ, மாணவியர்களுக்கும் 5 வருடங்கள் தொடர்ந்து கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆதவா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
சென்னை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (03.02.2022) அண்ணாசாலை, தேவநேய பாவாணர் நூலகத்தில், அரசுப் பள்ளியில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ / மாணவியர்களுக்கு ஆதவா அறக்கட்டளையின் சார்பாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், அரசுப் பள்ளிகளில் பயின்று , மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 20 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.25,000/க்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர் மற்றும் பொது நூலக இயக்குநர் இளம்பகவத், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், ஆதவா அறக்கட்டளையின் தலைவர் பாலகுமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கல்வி உதவித் தொகையானது மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 20 மாணவ, மாணவியர்களுக்கும் 5 வருட மருத்துவப் படிப்பிற்கு ஆண்டுதோறும் தலா ரூ.25,000/-ம் தொடர்ந்து தங்களது அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் என ஆதவா அறக்கட்டளையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.