தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
மறைமலை நகரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக தொடர் புகார்கள் வந்த நிலையில், போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு காட்டாங்குளத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு மறைமலை நகர் போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை பார்த்து பயந்த அந்த இளைஞர்கள் வாகனத்தை திருப்பி தப்ப ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் இருவரை பிடித்த நிலையில் ஒருவர் தப்பி ஓடினான்.
பிடிப்பட்ட இரண்டு இளைஞ்ர்களை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது அவர்களின் பெயர் பிரதாப்( 20) நந்தகுமார்(21) என்பதும், பல வாரங்களாக நோட்டமிட்டு இதுபோன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடுவதாக பிடிபட்ட 2 இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த 18 இருசக்கர வாகனத்தை போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.