'இரவு 7 மணி வரை ரேஷன் கடை திறப்பு'- அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல்
தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் இரவு 7மணிவரை ரேஷன் கடை திறந்து இருக்கும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் கூறி உள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் நவம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரையில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நியாயவிலைக் கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத்திட்ட மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்ட பொருட்களை வழங்குமாறு தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரையில், காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் முகக் கவசம் அணிந்து வரவும், ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்திக் கொண்டு பொதுவிநியோகத்திட்ட பொருட்களை பெற வேண்டும்.
இந்த விநியோகம், தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்புபவர்களுக்கு மட்டும் செய்யப்படுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே பொருட்களை வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்கள் வழக்கம்போல் பண்டிகைக் காலம் முடிந்து 08.11.2021 திங்கட்கிழமை முதல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் பொதுவிநியோகத்திட்ட மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்ட பொருட்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.