கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் சடலமாக மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டபோது அதிக ஆழத்தில் மணலைத் தோண்டி எடுத்த குழியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டம் ராமலிங்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் திருமானூர் அருகே உள்ள கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள குலதெய்வ கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது மகுடீஸ்வரன் மகன் மோகன்ராஜ் மற்றும் நண்பர்களுடன் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். மணல் குவாரி செயல்பட்டபோது தோண்டப்பட்ட பள்ளத்தில் ஏற்பட்ட குழியில் மோகன்ராஜ் சிக்கிக் கொண்டதால் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றும் முடியாத நிலையில் கரைக்கு வந்த நண்பர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆற்றில் இறங்கி மோகன்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருவையாறு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களுடன் சேர்ந்து மோகன்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் நீண்ட தேடலுக்குப் பிறகு மோகன்ராஜ் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மணல் குவாரி செயல்பட்டபோது அதிக ஆழத்தில் மணலைத் தோண்டி எடுத்ததால் வாலிபர் அதில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.