எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி: வைகோ குற்றச்சாட்டு
எடிப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி, மூன்று விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கை மண்ணோடு மண்ணாக மாறிவிடும் -வைகோ குற்றச்சாட்டு.
HIGHLIGHTS
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சின்னப்பாவிற்கு வாக்குகள் சேகரித்த வைகோ, எடிப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி என்றும், மூன்று விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கை மண்ணோடு மண்ணாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சின்னப்பாவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சார பரப்புரை மேற்கொண்டார். விளாங்குடி கிராமத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய வைகோ, எடப்பாடி ஆட்சியின் ஊழல் கணக்கற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஒப்பந்தங்களை உற்றார் உறவினர்களுக்கும் பினாமி களுக்கும் வழங்கி இருக்கிறார் என்ற புகாரினை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் இடத்தில் நேரடியாக கொடுத்துள்ளார். 200 கோடி ரூபாய்க்கு மேல் 19 சொத்துக்கள் உற்றார் உறவினர் பினாமிகள் பெயரிலேயே சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கிறார்.
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது வருமானத்தை மீறிய சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு இருக்கின்றது. இந்த ஆட்சியில் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு. அமைச்சர்கள் ஊழல் என்றால் சட்டமன்ற உறுப்பினர்களும் விதிவிலக்கல்ல என்பதை வாக்காளர்களும் நன்கு அறிவார்கள். ஊழல் மயமாகி விட்ட இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்று வைகோ கூறினார். மேலும் அரியலூர் மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயமே அழியக்கூடிய பகுதியாக மாறிவிட்டது.
வாட்டுகிற பணியில் கொட்டுகின்ற குளிரில் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆதரவாக சட்டங்கள் போட்டிருக்கின்றன. தமிழ்நாடு சட்ட மன்றம் ஆதரவு கிடைக்காத போதிலும் அந்த சட்டத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகிறார். முதலமைச்சர் பழனிச்சாமி தான் ஒரு விவசாயி என்று கூறுகிறார், விவசாயி என்றால் வேளாண் திருத்தச்சட்டத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள், விவசாயி என்று சொன்னால் மின்சார திருத்தச்சட்டத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் இருக்காது. விவசாய விளைபொருள் இருக்க முடியாது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போய்விடும். அம்பானி, அதானி சம்பாதிக்க கொண்டுவந்துள்ள இந்த சட்டங்களால் விவசாயிகளின் எதிர்காலம் மண்ணோடு மண்ணாக போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வைகோ கூறினார்.
மேலும் கடந்த 10ஆண்டுகளில் 5லட்சம்பேர் வேலையிழந்துள்ளனர். 5ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 90லட்சம்பேர் வேலையின்றி உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று எடப்பாடி ஆட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற எண்ணால் இயன்ற பணிகளை, சேவைகளை நான் செய்துள்ளேன். 5ஆண்டுகள் சிறைத்தண்டனை, 50ஆயிரம் கிராமங்களில் சுற்றுப்பயணம், 5ஆயிரத்து 200கிலோமீட்டர்தூரம் நடைப்பயணம் மேற்கொண்ட ஊழியக்காரன் ஆகிய நான் இருகரம் கூப்பி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.