மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய மாவட்ட கலெக்டர்
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கால்களை இழந்த 70 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் (கால்கள் மட்டும்) வழங்கிட தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீடு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 6 அன்று நடைபெற்றது. இம்முகாம் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிடும் பொருட்டு Freedom Trust - சென்னை நிறுவனத்தின் மூலம் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.
அன்றைய முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அளவீடு பணிகள் நிறைவடைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான செயற்கை கால்கள் வந்ததையடுத்து, 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டிலான 72 செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
மேலும், செயற்கை கால்கள் பெற்றுக்கொண்ட நபர்கள் அனைவருக்கும் Freedom Trust - சென்னை பணியாளர்கள் மூலமாக செயற்கை கால்கள் சரியான அளவில் பொருத்தப்பட்டு, அவர்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு நடப்பதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் மூலமாக உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முடநீக்கியல் வல்லுநர் ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.