944 ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் : அமைச்சர் வழங்கல்
944 ஏழைப் பெண்களுக்கு ரூ.7.22 கோடி மதிப்பீல் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (24.06.2022) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கத்தினை அரியலூர் மாவட்ட ஆட்சியரத்தில் பயனாளிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை சா.சி.சிவசங்கர் இன்றைய தினம் வழங்கினார்.
இதில் அரியலூர் மாவட்டம், அரியலூர், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த 414 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000/- நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த 530 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000/- நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கமும் என ஆகமொத்தம் 944 ஏழை பெண்களுக்கு ரூ.7 கோடியே 22 இலட்சத்து 68 ஆயிரத்து 880 மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) க.அன்பரசி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.