முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Namakkal news- சமுதாய வளர்ச்சிக்கு சிறந்த சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
Namakkal news, Namakkal news today- சமுதாய வளர்ச்சிக்கு சிறந்த சேவையாற்றும் இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் சிறந்த சேவையாற்றும் இளைஞர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆக. 15 சுதந்திர தினத்தன்று முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படும். இந்த விருது, ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகின்ற ஆக. 15 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், 2024ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023-2024) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்.) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எஸ்டிஏடி.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் வருகிற மே 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
வெப்சைட்டில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் நகல் மற்றும் உரிய ஆவணங்கள் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போலீஸ் துறையிடமிருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவைகளை 18.5.2024 மாலை 4 மணிக்குள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.