தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை
கரூரில் இடப்பிரச்னையில் தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
கரூரில் இடப்பிரச்னையில் தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
கரூர் மாவட்டம், கடவூரை அடுத்து உள்ளது தெற்கு அய்யம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ராமன், சின்ன பொண்ணு தம்பதியினர். இவர்களது வீட்டிற்கு அருகில் தனது சித்தப்பா மகனான லட்சுமணன் வசித்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு லட்சுமணன் தன் வீட்டிற்கு அருகில் தன்னுடைய இடத்திற்கு பாதுகாப்பாக இருக்க படல் கட்டியுள்ளார். இதற்கு ராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. அப்போது ராமனும், அவரது மனைவி சின்னபொண்ணும் சேர்ந்து கட்டையால் லட்சுமணனை தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து படுகாயமடைந்த லட்சுமணன், திருச்சி மாவட்டம், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்காக மதுரை மற்றும் கோவை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு குற்றவாளிகளான ராமன் மற்றும் அவரது மனைவி சின்ன பொண்ணுவிற்கு ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.