கரூரில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்
கரூரில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரூர் மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 48 வரையுள்ள பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் சணப்பிரட்டி பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக இருக்கும் காவேரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருப்பே உள்ள காரணத்தினால் போதுமான நீர் வரத்து இல்லை.
இதன் காரணமாக குறைந்த நீர் ஆதாரத்தை கொண்டு கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. எனவே பொதுமக்கள் பருவ மழை பொழிந்து ஆற்றில் போதுமான நீர் வரத்து வரும் வரை மாநகராட்சி மூலம் வழங்கும் குடிநீர், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலையின் காரணமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் (6 இடங்களில்) 1 பேருந்து நிலையம், 2)மாநகராட்சி அலுவலகம் முன்புறம், 3)பசுபதிபாளையம் பேருந்து நிறுத்தம், 4)வாங்கப்பாளையம் சுங்க சாவடி அருகில், 5) மண்டலம் -4 அலுவலகம் முன்புறம், 6) வெங்கமேடு பிள்ளையார் கோயில் முன்புறம் தண்ணீர் பந்தல் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்களை வெப்ப அலையில் இருந்து’ காத்துக்கொள்ள நண்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தேவையின்றி வெளியே வரவேண்டாம் என கரூர் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.