கரூரில் மே 13ம் தேதி உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி

கரூரில் மே 13ம் தேதி உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-07 03:54 GMT

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான “கல்லூரி கனவு” நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் 13.05.2024 அன்று நடைபெறுகிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தங்கவேல் தலைமையில், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தங்கவேல் பேசுகையில் கூறியதாவது:-

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியினை கரூர் மாவட்டத்தில் வருகின்ற 13.05.2024 அன்று கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்கள்.

இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகள் வருகின்ற 13.05.2024 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் கொங்கு திருமண மண்டபத்திற்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி கனவு நிகழ்ச்சி சிறந்த உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி  என்பதால் மாணவ மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன் அடையலாம். சிறந்த கல்வியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க இருப்பதால் இது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மிகவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக அமையும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News