12 தாலுகாக்களில் 4ம் தேதி கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி நேரடி நியமனம் தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 30-ந்தேதி நடைபெற இருந்த எழுத்து தேர்வு தேதி மாறுதல் செய்யப்பட்டு, 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் மாவட்ட நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டுள்ள 26 தேர்வு மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4-ந்தேதி நடைபெற உள்ளது.
கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டினை தாங்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி இவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் தமிழக அரசின் இணையதளம் http://www, tn.gov.in, வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் http://cra.tn.gov.in மற்றும் திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் https://tiruvannamalai.nic.in மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10.50 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் தேர்வுக்கான அனுமதி சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டுவர வேண்டும். இந்த தேர்வுக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எழுத்து தேர்வு 11 மணிக்கு முடிவுற்றதும், சைக்கிள் ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வு சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் 4-ந்தேதி நடைபெறவுள்ள கிராம உதவியாளர் பணி எழுத்து தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார்கள் மணிகண்டன், கலையரசி, தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி, வருவாய் ஆய்வாளர்கள், தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரூபா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எழுத்து தேர்வுக்கு கருப்பு பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். அனுமதிசீட்டு மற்றும் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எதையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக்கூடாது. செல்போன், புத்தகங்கள், பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்துக்கு கொண்டுவந்தால் அனுமதிக்கக்கூடாது என உதவி கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருவண்ணாமலை தாலுகாவில் 10 கிராம உதவியாளர் காலி பணியிடத்திற்கு 2,480 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39 விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,441 விண்ணப்பம் தகுதியானவை. அருணை பொறியியல் கல்லூரி தேர்வு மையத்தில் எழுத்துத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் மிதிவண்டி ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.