தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தச்சநல்லூரில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
HIGHLIGHTS
நெல்லை தச்சநல்லூர் நெல்லையப்பர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற விழாவை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜையும் நடந்தது. கோவில் முன்புள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், திரவியம், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மே மாதம் 7ம் தேதி தாமிரபரணி நதிக்கரையிலும், தீர்த்தவாரி நிகழ்ச்சி மே 8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.