வீதிக்கு தள்ளப்பட்ட கர்ப்பிணி பெண் - குழந்தைக்கு பெயர் வைத்த தன்னார்வலர்கள்.
கர்ப்பிணி பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து பெற்ற குழந்தைக்கும் பெயர் சூட்டிய தன்னார்வலர்கள்.
HIGHLIGHTS
நெல்லையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவனால் வீதிக்கு தள்ளப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தன்னார்வலர்கள்.அடைக்கலம் கொடுத்து, குழந்தைக்கும் பெயர் சூட்டி நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் பேரிடர்கள் மக்களுக்கு ஒருவித துயரை கொடுத்து வந்தாலும் பல நல்ல மனிதர்களை அடையாளம் காட்டக்கூடிய ஒரு காலகட்டமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அமலில் உள்ள கொரனோ ஊரடங்கின் போது ஆதரவில்லாமல் இருந்து வரும் மனிதர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையால் விதிக்கு தள்ளபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் அவரது குழந்தைக்கும் பெயர் சூட்டி நெகிழ்ச்சி ஏற்படுத்திய தன்னார்வலர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதாவது நெல்லை மாவட்டம் குறுக்குத்துறை சி.என். கிராமம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்ற பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு துரத்தபட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாப்பாட்டுக்கும் வழியில்லாத சூழலில் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் பரமேஸ்வரியை முத்துச்செல்வி தொடர்பு கொண்டுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி என்பதால் முத்துச் செல்விக்கு உடனடியாக உதவிசெய்ய ஆய்வாளர் பரமேஸ்வரி முன்வந்தார். அதன்படி நெல்லை டவுனில் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் செயல்பட்டுவரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் முத்துச் செல்வியை சேர்த்து விட்டார். அங்கு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சரவணன் தலைமையிலான தன்னார்வலர்கள் முத்துச்செல்வியை கவனித்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக காப்பகத்துக்கு சென்ற முத்துச்செல்விக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் அவர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால் முத்துச்செல்வி மீண்டும் காப்பகத்திற்கு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சர்வதேச குழந்தைகள் தினமான இன்று முத்துச் செல்வியின் குழந்தைக்கு பெயர் சூட்ட தன்னார்வலர் சரவணன் முடிவு செய்தார். அதன்படி இன்று காப்பகத்தில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவில் காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி கலந்து கொண்டு தன்னார்வலர்கள், ஆதரவற்றவர்கள் முன்னிலையில் குழந்தைக்கு தமிழரசன் என்று பெயர் சூட்டினார்.
மேலும் குடும்பத்தினர் ஸ்தானத்திலிருந்து குழந்தைக்கு பிற சடங்குகளையும் ஆய்வாளர் பரமேஸ்வரி செய்தார். குடும்பத்தினர் உறவினர்கள் கைவிட்ட நிலையில் காப்பகத்தின் உதவியால் தனது குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த சந்தோஷத்தில் முத்துச்செல்வி ஆனந்தக் கண்ணீர் விட்டார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.