நெல்லை: பெட்ரோல் பல்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது
கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெட்ரோல் பல்க் ஊழியரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது.
HIGHLIGHTS
பெட்ரோல் பல்க் ஊழியரை அவதூறாக பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது.
நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியைச் சேர்ந்த மோகனராம்(27) என்பவர் கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் அருகே உள்ள பெட்ரோல் பல்கில் கேசியராக வேலை செய்து வருகிறார். 07.11.2021 அன்று பெட்ரோல் பல்கிற்கு வந்த முத்தாலங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கணபதி என்ற கணேசன்(23), பாலகிருஷ்ணன்(27) என்பவர்கள் phone pay மூலம் 500 ரூபாய் அனுப்புவதாகவும் 200 ரூபாய்க்கு பெட்ரோலும், 300 ரூபாய் ரொக்கப் பணமாக தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு மோகனராம் பணம் தரமுடியாது என்று மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணபதி என்ற கணேசன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் மோகனராமை அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மோகனராம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு விசாரணை மேற்கொண்டதில் மோகனராமை அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த பாலகிருஷ்ணனை 08.11.2021 அன்று கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றவாளியான கணபதி என்ற கணேசனை(23) 12.11.2021 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.