காெடி நாள் நிதி வசூல்: நெல்லையில் ஆட்சியர் துவக்கி வைப்பு
நெல்லையில் கொடி நாளை முன்னிட்டு ரூ.1.91 இலட்சம் மதிப்பில் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டம் கொடி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வே. விஷ்ணு கொடி நாள் வசூலை துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கொடி நாள் வசூலை துவக்கி வைத்து ரூ.1.91 இலட்சம் மதிப்பில், 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (07-12-2021) வழங்கினார்.
முப்படையையும் சார்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளங்களிலிருந்து மக்களை காப்பதிலும், உள்நாட்டு கலவரத்தின் போது அமைதியை ஏற்படுத்துவதிலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து மக்களை காப்பதிலும், ஆற்றிவரும் அருஞ்சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் டிசம்பர் 7ம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. இக்கொடி நாளின் போது திரட்டப்படும் நிதியானது போரில் ஊனமுற்ற படைவீரர்கள், போரில் உயிர் நீத்த படைவீரர்களின் கைம் பெண்கள் ஆகியோரின் நலனுக்காகவும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர் தம் விதவையரின் நலனுக்காகவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 4000 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவையர்கள் வசித்து வருகின்றனர். 2020-ம் ஆண்டு கொடிநாள் வசூலில் அரசு ரூ.40 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் மாவட்ட அலுவலர்கள் முயற்சியினால் ரூ.65 லட்சம் வசூல் செய்து அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 2021-ம் ஆண்டில் இம்மாவட்டத்தைச் சார்ந்த 855 நபர்களுக்கு ரூ.2.50 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் திருமண மானியத்தொகையாக 2 நபர்களுக்கு தலா 25 ஆயிரத்திற்கான காசோலையினையும், கண்கண்ணாடி மானியத்தொகையாக 2 நபர்களுக்கு 11 ஆயிரத்திற்கான காசோலையினையும், கல்வி உதவித்தொகையாக 6 நபர்களுக்கு 1.40 இலட்சத்திற்கான காசோலையினையும்,கர்ணல் எல்.பி.நாராயணன் (ஓய்வு) தனது சொந்த பொறுப்பில் வழங்கும் நிதியாக 5 நபர்களுக்கு தலா 2 ஆயிரத்திற்கான காசோலைகளை ஆக மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.1.91 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார். கொடிநாள் வசூலில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், முன்னாள் படைவீரர் நல இயக்குநர் ந. முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.மகாகிருஷ்ணன், நல அமைப்பாளர் சாகுல்ஹமீது, ஊர்காவல் படை தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.