நெல்லையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் தேர்தல்: முன்னாள் எம்எல்ஏ குற்றசாட்டு
மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதாக முன்னாள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ புகார்
HIGHLIGHTS
நெல்லையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றமால் தேர்தல் நடைபெறுகிறது. அதிகாரிகள் திமுக அரசின் பிடியில் உள்ளனர். சபாநாயகர் படத்தை பயன்படுத்தி மாநில அமைச்சர் பிரசாரம் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன். போலீஸார் என்னை தடுப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், ராதாபுரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனு அளிப்பதற்காக, இன்பதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது, போலீசார் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இன்பதுரை போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இன்பதுரை பத்திரிக்கையாளர்களிடம் மேலும் கூறியதாவது : நெல்லை உள்ளாட்சி தேர்தலில், நீதிமன்ற உத்தரவை சரியாக பின்பற்றவில்லை. வாக்குப்பதிவு நேரலை செய்ய வேண்டும். கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதிகாரிகள் வெறும் அறிக்கை மட்டுமே விடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் திமுக அரசின் பிடியில் இருக்கிறார். அதனால் தான் என்னை உள்ளே விட அனுமதிக்கவில்லை.
இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த வேண்டாம் என்றேன். முன்னாள் எம்எல்ஏ-ஆன எனக்கே இந்த கதி என்றார் இந்த அரசாங்கத்துக்கு அலுவலகம் இல்லையா. அரசு நடுத்தெருவில் உள்ளதா. அலுவலகத்தில் மனு வாங்க கூடாது என விதிகள் இருக்கிறதா. இதுவரை கூடுதல் பார்வையாளர்கள் எங்குமே போடவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு என்பதை நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்துரைப்போம். குற்றச்சாட்டுகளை சொல்ல வருவதால் என்னை தடுக்கின்றனர்.
சபாநாயகர் அப்பாவு கட்சி சார்பற்றவர் ஆவார். ஆனால் அவர் படத்தை பயன்படுத்தி மாநில அமைச்சர் பிரசாரம் செய்கிறார். இது அதிகார துஷ்பிரயோகம். அவராவது இதை கண்டிக்க வேண்டாமா. ராதாபுரத்தில் வேட்பாளர் சாந்தி சுயம்புராஜ், விதியை மீறி தேவாலயத்தில் பிரசாரம் செய்கிறார். பறக்கும்படை எங்கே போனது. தேர்தல் ஆணையம் இருக்கிறதா? திமுக கிளை தேர்தலை போல் தேர்தல் நடக்கிறது. என்னை உள்ளே விடாமல் தடுப்பதே நீதிமன்ற அவமதிப்பு ஆகும். நியாயமான தேர்தல் நடைபெறுவதாக தெரியவில்லை. நீதின்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டால், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. வழக்கமாக தவறு செய்வது அதிகாரிகள் தான். இதுதொடர்பாக ஆளுநரிடம், நேரில் சென்று புகார் அளிப்பேன். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தவறுகளை சரி செய்ய வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.
ராதாபுரம் 17வது ஊராட்சிய வார்டில் சவுமியா விஎஸ்ஆர்.ஜெகதீஷ் போட்டியிடுகிறார். ஆனால் இதுவரை அவர் பிரசார களத்துக்கே வரவில்லை. அப்படியொருவர் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. வேட்பாளர் கையெழுத்திடாமல் ஆள் மாறாட்டம் நடைபெறுகிறதா என்ற அச்சம் எழுகிறது. எனவே இதையும் அரசு கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நெல்லையில் தற்போது ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழ்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.