பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பா.வவிஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நான்கு மண்டல பகுதி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் பழுது நீக்கம் செய்யவும், தாமிரபரணி ஆற்று பகுதி கிணறுகளில் உள்ள மணல்களை அப்புறப்படுத்தி தூர் வார வலியுறுத்தப்பட்டது. கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் சுமார் 32 இடங்களில் இருந்து மற்ற பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்வதை தடுக்க வலியுறுத்தியும் மேலப்பாளையம் பகுதிகளில் பல இடங்களில் குழாய்கள் பழுதாகி இருப்பதால் அதனை உடனடியாக சரி செய்திடவும், கொண்டாநகரம் நீர்தேக்கத்தில் இருந்து வரும் குழாய்களில் அதிகமான மண் அடைப்பு உள்ளது. அதனை சரி செய்யவும் தெரிவிக்கப்பட்டது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் அளவாக கலந்து குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டது. மண்டல தலைவர்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை அவர்கள் பகுதிகளில் பணியாற்றும் உதவி ஆணையாளர்கள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதிபிரபு, மேலப்பாளைம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையாளர்கள் ஜகாங்கீர் பாஷா, ஐயப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராமசுவாமி, பைஜூ மற்றும் இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.