நெல்லையில் நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழா
காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் கலைஞர்களின் நாதஸ்வர இசை பேரணி நடைபெற்றது
HIGHLIGHTS
பிரபல நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோவில் முன்பிருந்து நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் கலைஞர்கள் நாதஸ்வர இசை பேரணி நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காருக்குறிச்சி என்ற குக்கிராமத்தின் பெயர். நாடு முழுக்க ஒலிக்கக் காரணமாக இருந்தவர் நாகஸ்வர கலைஞர் அருணாச்சலம். இவர் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் போன்றோருக்கு மிகவும் நெருக்கமாக நாதஸ்வர இன்னிசை புகழ் சேர்த்தவர். கொஞ்சும் சலங்கை எனும் திரைப்படத்தில் வந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்த இத்தகைய சிறப்புகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா கடந்த 24.6.2021-ல் தொடங்கியது.
பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல இடங்களிலும் அவரது நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மாவட்ட தமிழ் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் காருக்குறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழா நெல்லை டவுண் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என திரளானோர் கலந்து கொள்கின்றனர். நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் முன்பிருந்து நூற்றாண்டு விழா மண்டபம் வரை காருக்குறிச்சி அருணாசலம் அவர்களது திரு உருவப் படத்துடன் நூற்றுக்கணக்கான தவில் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் நாதசுர இசை பேரணியை நடத்தினர்.
அதன்படி சுவாமி சன்னதி முன்பு இருந்து தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நூற்றாண்டு விழா மண்டபத்தை அடைந்து இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து காருகுறிச்சி அருணாசலம் அவர்களால் இசைக்கப்பட்ட பாடல்களை நாதசுரத்தில் உற்சாகத்துடன் இசைத்து சென்றனர். குறிப்பாக சிங்கார வேலனே தேவா என்ற பாடலை நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்களுடன் இணைந்து இசைத்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.