நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி இன்று காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
இம் மாதம் 29-ம் தேதி சௌந்திர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சௌந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது.30-ஆம் தேதி சத்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் வெளி தெப்பக்குளத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.