திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார் மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை மேயர் அன்பழகன் ஏற்றினார்
HIGHLIGHTS
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று காலை நாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார். அப்போது அங்கு குழுமியிருந்த அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மேயர் அன்பழகன் திருச்சி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மண்டல குழு உதவி ஆணையர் சண்முகத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதன் பின்னர் மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மேயர் மற்றும் அதிகாரிகள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர்.
முன்னதாக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்திற்குச் சென்ற மேயர் மற்றும் அதிகாரிகள் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் ,நகர செயற்பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்ரமணியன் மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, ஜெய நிர்மலா, மதிவாணன், ஆண்டாள் ராம்குமார் ,விஜயலட்சுமி கண்ணன், மாநகராட்சி வரி மேல்முறையீட்டு குழு தலைவர் நசீர் ஆசிப் அலி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.