தேசிய குற்ற ஆணவ காப்பக விருது பெற்ற கோவில்பட்டி உதவி ஆய்வாளருக்கு எஸ்.பி. பாராட்டு…
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மேரிகலாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ் (CCTNS) என்ற இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.
இந்த இணையதள பயன்பாடு குறித்து புதுடில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் CCTNS இணையதளத்தை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 பேர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் மேரிகலாவும் ஒருவர் ஆவார். அவருக்கு 15.12.2022 அன்று புதுடில்லியில் வைத்து தேசிய குற்ற ஆவண காப்பகம் விருது வழங்கியது.
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மேரிகலாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று நேரில் அழைத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, CCTNS உதவி ஆய்வாளர் விக்டோரியா அற்புதராணி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
36 பேருக்கு பாராட்டு:
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் உட்பட 36 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.