திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் இன்று தான் திறப்பு
திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று தான் திறக்கப்பட்டன.
HIGHLIGHTS
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 19 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1 ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது .
இதனையடுத்து இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்தனர். இந்நிலையில் மனக்கால் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை வருகை புரிந்த மாணவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இணைந்து மேளதாளம் முழங்க மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் மாங்குடி அரசு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.