தஞ்சை கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மணிகள்: விவசாயிகள் வேதனை
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 451 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன
HIGHLIGHTS
தஞ்சை கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக தேங்கி கிடக்கும் நெல்மணிகள். அறுவடை செய்து 20 நாட்களுக்கு மேல் காத்திருப்பதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை.
தஞ்சை மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா மற்றும் தாளடி 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 451 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது பூதலூர், அய்யனாபுரம், தொண்டராயன்பாடி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைப் செய்யப்படும் நெல்லை தொண்டராயன்பாடி கொள்முதல் நிலையத்தில் போடுவதற்காக விவசாயிகள் இரவு பகலாக காத்துக்கிடக்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 500 மூட்டை மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் நெல்லை குவித்து வைத்து வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலில் இருப்பதாகவும், மேலும் ஆன்லைன் கொள்முதல் முறையில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஆன்லைனில் ஒவ்வொரு முறையும் பதிவு செய்வதற்கு 150 ரூபாய், 200 ரூபாய் கூடுதல் செலவாகிறது, சர்வர் பிரச்னை, கிராமங்களில் போதுமான இணைய தள சேவை கிடைக்கவில்லை என விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பன்றி, மாடு போன்ற கால்நடைகளால் நெல்மணிகள் அதிகளவில் சேதப்படுவதாகவும், அவற்றை காவல் காக்க ஒரு நாளைக்கு ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை எடுத்து செல்வதற்கு போதிய லாரிகள் இல்லாததால் 5,000 மூட்டைகள் போல் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து போடுவதற்கு போதிய இடவசதி இல்லை என்றும், இதனால் கொள்முதல் நிலைய அதிகாரிகள் கொள்முதல் செய்வதற்கு காலதாமதம் செய்கின்றனர் என குற்றம் சாட்டுகின்றர். எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ஒருநாளைக்கு குறைந்தது 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.