மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 9ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட ஏராளமான விவசாயிகள் தஞ்சையிலிருந்து கர்நாடகம் நோக்கி புறப்பட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசு அண்மையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 9 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக சட்டமன்ற முடிவினை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.ஆர்.பாணாடியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தஞ்சை இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பேட்டி அளித்த பி.ஆர்.பாண்டியன்,உச்சநீதி மன்ற உத்தரவுகளை மீறி கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதியும் ஒதுக்கி விட்டது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையை மத்தியஅரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மேகதாது பகுதியை முற்றுகையிடும் போராட்டத்தில் நாளை காலை ஈடுபடுவதற்காக வாகனங்கள் மூலம் இன்று புறப்படுகிறோம் என்றார். இதனையடுத்து ஏராளமான வாகனங்கள் மூலம் விவசாயிகள் கர்நாடகம் நோக்கி புறப்பட்டனர்.