தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளி காசு, சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் 300 வீரர்கள் அடக்க முயன்றனர்.
தஞ்சையை மாவட்டம், நாஞ்சிக்கோட்டையில் உள்ள வீர முனி ஆண்டவர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இதில் தஞ்சை! திருச்சி! புதக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோவில் காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
பின்னர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் பல காளைகள் எவருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப் பாய்ந்து சென்றன.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளி காசு, நாற்காலி, சைக்கிள், கட்டில், கடிகாரம், குக்கர், குழலை பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டியைக் காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். பலர் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே இருந்த உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்றும், களத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் வெளிப்புறமாக நின்றபடியும் போட்டியை கண்டு களித்தனர்.