செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் பல மாதத்திற்கு பின் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி
செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் 16 மாதத்திற்கு பின்னர் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி.
HIGHLIGHTS
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கும், தொடர்ந்து செங்கோட்டையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இடைவிடாமல் சிறந்த முறையில் இயங்கி வந்தது. நடுத்தர மக்கள் பெரிதும் உபயோகித்து வந்த இந்த ரயில் சேவை மூலம் மதுரையில் இருந்து தென் மாவட்டங்களில் முக்கிய நகரங்களான சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.
அதேபோல் செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், அரசு ஊழியர்கள், மதுரைக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் வியாபாரிகளும், இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். தினமும் செங்கோட்டையில் இருந்து மதுரை வரை உள்ள இருப்புப்பாதை வழித்தடத்தில் இந்த ரயில்கள் 6 முறை இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 24.03.2020 அன்று முதல் காெராேனா வைரஸ் நோய் பரவல் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து செங்கோட்டை, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் செல்லும் அதிவேக முன்பதிவு செய்யப்பட்ட ரயில் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ரயில் பயனாளிகள் பெரிதும் பயன்பட்டு வந்த மதுரை செங்கோட்டை பயணிகள் ரயிலை பொதுமக்களின் வசதி கருத்தில் கொண்டு இயக்க வேண்டும் என மதுரை ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் இன்று முதல் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் காலை நேரத்திலும் அதேபோல் அதே மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் ரயில் மாலை நேரம் மட்டும் இயங்கும் என அறிவித்தது அதன்படி மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் முன்பதிவு இல்லாத பயணிகள் சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது.
தற்போது இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகள் மட்டுமே பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. முன்பு போல தொடர்ந்து ஆறு தடவை இந்த ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும் என்றும் தற்போது இயக்கப்படும் ரயில்களில் கட்டணம் அதிக அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர் இதனால் குறைந்த கட்டணத்தில் நிறைந்த வசதியுடன் தொடர்ந்து ஆறு தடவை இந்த ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.