குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் கொலை: காவல்துறையினர் விசாரணை
குற்றாலத்தில் தங்கும் விடுதி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (36). இவர் சென்னை சிட்ல பக்கத்தில் மூலிகை மருந்து வியாபாரம் செய்து வந்தார்.
இவரும் இவரது உறவினரான நாராயணகுமார் என்பவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை மற்றும் செல்வம் ஆகிய நான்கு பேரும் குற்றாலத்திற்கு குளிக்க வந்துள்ளனர்.
அங்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இவர்கள் தங்கி இருந்தனர். நேற்று பிற்பகல் நாராயணகுமார் மற்றும் தங்கதுரை ஆகியோர் புரோட்டா வாங்கி வருவதற்காக சென்றுள்ளனர் . அப்போது அறையில் இருந்த முருகேசனை செல்வம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து செல்வம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். உணவு வாங்கிக் கொண்டு வந்த இருவரும் நீண்ட நேரமாகியும் செல்வம் வராததால் சந்தேகமடைந்து அறைக்குள் சென்று பார்த்தபோது, முருகேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் நாராயணகுமார் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
குற்றாலத்தில் சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.