சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு நிலவியது.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதற்கு பட்டா வாங்க முயல்வதாகவும் கூறி, பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ஆட்சியர் அலுவலம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது, அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து வந்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், அவரிடம் விசாரணை செய்து, பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
கண்ணன் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திருப்புவனம் வட்டாட்சியர் அரசு பள்ளிக்கூட இடத்தை தனிநபர் பட்டா வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.