தமிழகமீனவர்கள் 39 பேர் இலங்கை கடற்படையால் கைது
ஐநாவில் நடைபெற்ற மனித உரிமை வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்த நிலையில் ஒரே நாளில் 39 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 20 மீனவர்களையும், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 14 மீனவர்களையும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் என 39 மீனவர்களையும் அவர்களுடைய 5 படகையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன் துறை தலை மன்னார் திரிகோணமலை ஆகிய கடற்படை முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் 15 நாள்கள் தனிமைப்படுத்தி வைத்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள் என தெரியவருகிறது.
இது குறித்து இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் தெரிவிக்கும் போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஐநாவில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையை இந்தியா கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மீட்டுத் தரவேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார்.