மன்னார் வளைகுடா பகுதியில் கரையோரம் மீன்பிடிக்கும் மீனவர்கள் போராட்டம்
விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாட்டுப்படகு சிறுதொழில் மீனவக் கிராம மக்கள் காதுகளில் பூ சுற்றி போராட்டம்
HIGHLIGHTS
கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களை தடுத்துநிறுத்தாத மீன்வளத் துறையினரை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் காதுகளில் பூ சுற்றி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பாரதி நகர், முத்துராஜா நகர், விவேகானந்தபுரம் மற்றும் மண்டபம் முதல் ஏர்வாடி வரையிலான கடல் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கடல் வளத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீன்பிடித்து வருவதாகவும், ஆனால் விசைப்படகு மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி இந்த பகுதியில் மீன்பிடித்து நாட்டுப்படகு மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மூலம் விசைப்படகுகள் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஏராளமான விசைப்படகுகள் கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே இழுவலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே கரையோர மீன் பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசின் மீன்வளத் துறையினர் இடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையினரை கண்டித்து காதுகளில் பூ சுற்றி போராட்டம் நடத்தினர்.