எதிர்கால சமூகத்தின் வழிகாட்டிகள் ஆசிரியர்கள்தான்:கருவூல அலுவலர் பேச்சு
பொருளாதார சுதந்திரம், நிம்மதியான வாழ்வு, மருத்துவ உதவி இதை மையப்படுத்தித்தான் ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது
HIGHLIGHTS
சிறந்த மாணவர்களை உருவாக்குவதன் மூலம் எதிர்கால சமூகத்தின் வழியகாட்டிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் என்றார் புதுக்கோட்டை மாவட்ட கருவூல அலுவலர் செ.இராஜலெட்சுமி.
ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஓய்வூதியர் தினவிழாவில் .பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வாலியுறுத்தி நீங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றீர்கள். தற்போதைய அரசும் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. பல மாநிலங்கள் தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தத் தொடங்கிவிட்டன. பணியில் உள்ளவர்கள் ஓய்வூதியர்களுக்காக போராடும் நிலைமாறி ஓய்வூதியர்கள் பணியில் இருப்பவர்களின் எதிர்காலத்திற்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார சுதந்திரம், நிம்மதியான வாழ்வு, மருத்துவ உதவி இதை மையப்படுத்தித்தான் ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது. இங்கே நமக்கு கிடைத்திருக்கின்ற உரிமைகள் அனைத்தும் போராட்டங்கள் மூலமாக கிடைக்கப் பெற்றவையே. ஓய்வூதியத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றி நாம் இங்கு விவாதித்துக் கொண்டு இருக்கின்றோம். அதே நேரத்தில் ஓய்வூதியமே இல்லாமல் ஒரு பகுதியினர் ஆக்கப்பட்டு வருகின்றனர். முறைசாராத் தொழிலாளர்களின் நிலை இதைவிட படுமோசம். உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தத் தொடங்கிய பிறகுதான் இத்தகைய சூழல் உருவாகி உள்ளது.
சராசரி இறப்பின் வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2050-ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் மூத்தோர் குடிமக்களாக இருப்பர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஓய்வூதியர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், நிம்மதியான வாழ்வுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடமை மக்கள் நல அரசுக்கு உள்ளது. ஆசிரியர்கள் மாணவர் சமூகத்தை மட்டும் உருவாக்கவில்லை. நல்ல மாணவர்களை உருவாக்குவதன் மூலம் எதிர்கால சமூகத்திற்கும் வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் அவர் என்றார்.
விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். மாநில பொதுகுழு உறுப்பினர் டி.சிதம்பரம் தொடக்கவுரையாற்றினார். மேனாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் கா.செயபாலன் வரவேற்க, பொருளாளர் நா.கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான ஓய்வுபொற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.