புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி: அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பல்வேறு வகையான படைப்புகளை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பல்வேறு வகையான படைப்புகளை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில்2021 மற்றும்2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இன்று(29-3-2022) துவங்கியது.
இந்த அறிவியல் கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மஞ்சுளா, ராஜாராமன், மணிமொழி, மற்றும் உதவி திட்ட அலுவலர் தங்கமணி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் ,தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் 150 மாணவர்கள் பங்கேற்று தங்களின் புதிய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.மேலும் அறிவியல் கண்காட்சியில் உணவு, நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள வகைகள், பொருள்கள், மற்றும் மக்களும் எண்ணங்களும், இயற்கை நிகழ்வுகள், இயற்கை வளங்கள், என 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை செய்து பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் படைப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும் இந்த அறிவியல் கண்காட்சியில் ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி கோகிலா மாற்று திறனாளிகள் எளியமுறையில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனத்தில் சிரமமில்லாமல் செல்வதற்காக குரல் கட்டளை மூலம் சக்கர நாற்காலியை இயக்க செய்தல் என்ற இயந்திரத்தை செய்து காட்டினார்.இதேபோல் எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ஹரி சக்தி மழைக்காலங்களில் ஆற்றில் சென்று கடலில் கலக்கும் மழை நீரை தடுத்து தடுப்பணைகள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக ஏதுவாக தடுப்பணைகளை வடிவமைத்து பார்வைக்காக வைத்து கண்காட்சியில் அசத்தினார்.