புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த 10 தினங்களாக கனமழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள 90 சதவீத நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழையானது நேற்று மாலை திடீரென்று மீண்டும் பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் பல பகுதிகளில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பானது உப்புபட்டி, குளத்துப்பட்டி, மங்கத்துப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
இரவு அதிகாரிகளிடம் தகவல் கூறியும் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.
நேற்று இரவு முதல் இப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குழந்தைகளை வீட்டில் வைத்து கொண்டு பயத்துடனேயே இரவை கழித்ததாக அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்தது போல இவர்களையும் முகாம்களில் தங்க வைத்து நிவாரணங்களை வழங்க வேண்டும் ,தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர்.