புதுக்கோட்டை ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் நடந்த கிராமசபை
தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பங்கேற்று பேசினார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கவிநாடு கிழக்கு ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜாமுன்னிலை வகித்தார். ஊராட்சிமன்றத் தலைவர் ரெங்கம்மாள் பழனிச்சாமி கூட்டத்திற்கு தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: கிராமங்கள் வளர்ச்சியையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. பெற்றோர்கள் , பள்ளிக்குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை கவனிப்பதோடு அவர்களின் உடல்நலனையும் பேணிகாக்கும் வகையில், சத்தான உணவுகளை அளிக்க வேண்டும். கல்வியில் சிறந்தோங்க தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சியில் பொறுப்புகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு 50 சதவீதம் தமிழக அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பில் பதவிக்கு வந்துள்ள பெண்கள் அவர்கள் தனித்துவமுடன் செயல்பட தகுதிகளை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா , ஊராட்சிகள் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் , கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத், ஒன்றியக்குழுத் தலைவர் சின்னையா, முன்னோடி வங்கிகளின் மேலாளர் ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் ரெங்கம்மாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.