புரட்டாசி பிறப்பு எதிரொலி: களையிழந்த புதுக்கோட்டை ஆட்டுச்சந்தை
புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்படுகிறது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே வாரவாரம் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருந்தும், பேராவூரணி பட்டுக்கோட்டை உள்ளிட்ட வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வரும். சென்ற மாதம் முழுவதும் முகூர்த்த காலம் என்பதால், தொடர்ந்து ஆடுகளின் விலை இரு மடங்கு அதிகரித்தும் விற்பனையும் அதிகரித்து வந்தது. இதனால் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் இறைச்சிச்கடை வைத்திருப்பவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருண்டனர்.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் வழக்கம் போல் ஆட்டுச் சந்தை கூடியது. ஒவ்வொரு வாரமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வரும். இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், வாரச்சந்தையில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அது மட்டுமில்லாமல் ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு சிலர் விற்பதற்காக கொண்டு வந்த ஆடுகளின் விலையும் இரு மடங்கு குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்டதால் விற்பனை செய்யாமல் ஆடுகளை மீண்டும் வீடுகளுக்கு கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், பலர் இறைச்சிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால், ஆடுகள், இறைச்சிகளின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.