நாட்டு மரங்கள் நடுவதற்கு மட்டுமே முன்னுரிமை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பேட்டி
தமிழ்நாட்டில் நாட்டு மரங்களுக்கு நடுவதற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி அவர்களிடம் மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் அலுவலருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் மருத்துவக் கல்லூரி சுற்றி மிகவும் அற்புதமாக மரக்கன்றுகள் நட்டு சிறப்பாக பராமரித்து வரும் கல்லூரி முதல்வருக்கும் சால்வை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழகத்தில் வெளிநாட்டு மரக்கன்றுகளுக்கு அனுமதி கிடையாது. அதேபோல் கருவேலமரங்கள், தைல மரங்கள் போன்றவைகளுக்கும் தமிழகத்தில் நடுவதற்கு அனுமதி கிடையாது. நாட்டு மரங்கள் வளர்ப்பதற்கு மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம். சுற்றுச்சூழலை கெடுக்கும் விதத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழக முதல்வரும் அதற்கு அனுமதி வழங்க மாட்டார் என்று பேசினார்.
இந்நிகழ்வில் வருவாய் அலுவலர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்