முதியோருக்கான பயணச்சலுகையை மீண்டும் வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை
Today Pudukkottai News -ரயில் பயணத்தில் 60 நிரம்பிய ஓய்வூதியர் களுக்கான பயணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
HIGHLIGHTS
Today Pudukkottai News -ரயில் பயணத்தில் 60 நிரம்பிய ஓய்வூதியர்களுக்கான பயணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ம.வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் என்.ராமச்சந்திரன், அ.மணவாளன், எம்.ஏ.ரகுமான், உள்ளிட்டோர் பேசினர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 வீடுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரயில் பயணத்தில் 60 நிரம்பிய ஓய்வூதியர்களுக்கான பயணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மூத்தகுடிமக்களுக்கான ரயில்பயணச்சலுகை ரத்து செய்யப்பட்டது எப்போது: ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இது, மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்நிலையில், ரயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை 2020ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்த குடிமக்களுக்கு இந்த கட்டண சலுகை பேருதவியாக இருப்பதால், இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த கட்டண சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று ரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த கட்டண சலுகை ரத்து காரணமாக, 2021-2022ஆம் நிதியாண்டில் 63 லட்சம் மூத்த குடிமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்திருப்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால், 2020-ஆம் ஆண்டு முதல் பயணத்தை படிப்படியாக தவிர்த்து வரு கின்றனர்.
நாடு முழு வதும் கடந்த 2019-2020ஆம் நிதியாண்டில், 6.18 கோடி மூத்த குடிமக்கள் ரயில் களில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இது, 2021-2022ஆம் நிதியாண்டில் 5 கோடியே 55 லட்சமாகக் குறைந்தது. இதன்மூலம், 63 லட்சம் குடிமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்துள்ளனர். 2020-2021ஆம் நிதியாண்டில் கரோனா காரணமாக, மிகக் குறைந்த அளவில் 1.90 லட்சம் பேர் மட்டும் பயணம் செய்தனர். தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கட்டண சலுகை இல்லாத காரணத்தால், மூத்த குடிமக்கள் பயணத்தை தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது. எனவே, மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2