புதுக்கோட்டை தனியார் உரக்கடைகளில் வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரக்கடைகளில் யூரியா சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்று வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு, 73 ஆயிரத்து 257 எக்டர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்காக யூரியா, வேளாண் துறையால் சப்ளை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு யூரியா தங்குதடையின்றி கிடைப்பதற்கும் , பயிர்களை காப்பாற்றுவதற்கும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது
புதுக்கோட்டை மாவட்ட தேவைக்காக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நிறுவனத்திடம் இருந்து ரயில் மூலம் 22 பெட்டிகளில் 1600 மெட்ரிக் டன் யூரியா கொண்டுவரப்பட்டது. யூரியா மூட்டைகள் ரயிலில் இருந்து லாரிக்கு மாற்றப்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் தனியார் உர நிறுவன கடைகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அழுதாராம் உத்தரவின் பேரில், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் முன்னிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு கடைகளில் நேற்று, அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்கள் உரக்கடைகளுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு சரியான முறையில் யூரியா வழங்கப்படுகிறதா என்பதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு விதிமுறைகளின்படி கூட்டுறவு சொசைட்டிகள் தனியார் உரக்கடைகள் விதிமுறைகளை பின்பற்றி கடைகளில் யூரியா இருப்பு விபரத்தினை சரியான முறையில் பதிவேடுகளில் எழுதி பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.