குடிசைமாற்று வீடு திட்டத்திற்கு போலியானபயனாளிகள்:அமைச்சர் தகவல்
குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு போலியான பயனாளிகள் சேர்க்கப்பட்டு இரண்டாயிரம் கோடிக்கு மேல் வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பரசன் பேட்டி
HIGHLIGHTS
புதுக்கோட்டை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தை நிதி உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் சிறு தொழில்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து தமிழக ஊரக தொழில் மற்றும் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சட்ட அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில் தொடங்குவதற்கு கடன் நிதி உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக பல்வேறு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் பல பகுதிகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
மீதமுள்ள பணிகள் முடிவடைந்தவுடன் படிப்படியாக பயனாளிகளுக்கு வீடுகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் குடிசை மாற்று வாரிய திட்டத்திற்கு போலியான பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆய்வு நடத்தி முறையான பட்டியல் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சிலர் ஆதாயம் தேடுவதற்காக பயனாளிகள் தேர்வு இல்லாமலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள பயனாளிகள் தங்களின் பயனாளி தொகை கட்டுவதற்கு சிரமப்பட்டால் அவர்களுக்கு அரசு நிதி உதவி வங்கிகளில் பெற்றுத்தரும். அதன்பிறகு பயனாளிகள் வங்கி கடனை அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள அனைத்து பயனாளிகளின் வீடுகளுக்கு பட்டா உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இனிவரும் காலங்களில் மாற்று வாரியத்தால் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு முறையாக அவர்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு வீடுகளை தேர்வு செய்து வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.