விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித்துறை உருவாக்க வலியுறுத்தல்
காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்
HIGHLIGHTS
தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை உருவாக்கி நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-ஆவது மாநாடு கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோழர் பி.மருதப்பா நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் எம்.சண்முகன் தலைமை வகித்தார். வி.மணிவேல் கொடியேற்றினார். எம்.ஜோஷி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் கே.தங்கவேல் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், பொருளாளர் கே.சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநில செயலாளர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில செயலாளர் ஏ.பழநிசாமி நிறைவுரையாற்றினார்.
மாவட்டத் தலைவராக எஸ்.சங்கர், செயலாளராக டி.சலோமி, பொருளாளராக கே.சண்முகம், துணைத் தலைவர்களாக எம்.சண்முகம், வி.மணிவேல், சி.ராசு, சுபி, பி.ராமசாமி, துணைச் செயலாளர்களாக கே.சித்திரைவேல், எஸ்.பொருமாள், ஆர்.சக்திவேல், ஏ.செந்தமிழ்ச்செல்வன், எம்.இளவரசு, உள்ளிட்ட 25 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
தமிழக அரசு வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை உருவாக்கி நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதிட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். அவர்களுக்கு வருடத்திற்கு நூறுநாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய குற்ற ஆவண மையத்தின் ( என்.சி.ஆர்.பி ) அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டில் 827 விவசாயத் தொழிலாளர்களும் 2015 ஆம் ஆண்டில் 604 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு 6 விவசாயிகளும் 421 விவசாயத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் தற்கொலைசெய்து இறந்ததாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலையில் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் இருக்கிறது. வறுமையும், வேலையின்மையுமே விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகிறது. நூற்றுக் கணக்கில் தற்கொலை நேர்ந்தாலும் விவசாயிகளின் தற்கொலை என்பது நாடுதழுவிய பிரச்சனையாக எழுப்பப்பட்டதுபோல விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றப்படவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் திரட்டப்பட்ட தொழிலாளர்களாக இல்லை என்பதுதான் முக்கிய காரணியாகவுள்ளது.