தமுஎகச- திடல் இலக்கியக் கூடல் சார்பில் ஆவணப்படம்: அமைச்சர் மெய்யநாதன் வெளியீடு
புதுக்கோட்டை தமுஎகசவின் திடல் இலக்கியக்கூடல் சார்பில் குறும்படம் வெளியீட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்
HIGHLIGHTS
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் இலக்கிய கூடலின் சார்பில் ஆவணப்பட வெளியீட்டு விழா புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமுஎகச மாவட்டத்தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு ட்ரீம் ஆப் ஒலிம்பிக் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் நா.முத்துநிலவன், தங்கம்மூர்த்தி, ஜீவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், கவிநாடு இளைஞர் விளையாட்டு மன்றத் தலைவர் பிவிஆர்.சேகரன், பயிற்சியாளர் எஸ்.லோகநாதன், ஆவணப் பட இயக்குனர்கள் ராஜூ மாரியப்பன், சிவ.சித்திரைச்செல்வன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.ட்ரீம் ஆப் ஒலிம்பிக் மற்றும் நாடோடி ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. திரைப்படங்கள் குறித்து எஸ்.இளங்கோ, கி.ஜெயபாலன், ஆர்.நீலா, துரை.அரிபாஸ்கர், அ.மணவாளன் உள்ளிட்டோர் பேசினர். நிறைவில், புதுகை கிளைச் செயலாளர் சு.பீர்முகமது நன்றி கூறினார்.