மழையைப் பொருட்படுத்தாமல் மக்களிடம் மனுக்களை வாங்கிய ஆட்சியர் கவிதா ராமு
பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளிகளுக்கு குழந்தைகள் அனைவரையும் அனுப்ப பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
HIGHLIGHTS
தேசப்பிதா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், வருவாய்த்துறை மருத்துவத்துறை கால்நடைத்துறை குழந்தைகள் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக அரசு என்னென்ன திட்டங்களை அறிவித்து உள்ளது என்பது குறித்தும் ஊராட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் பொது மக்களிடம் விளக்கிக்கூறினர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசியதாவது: திறந்தவெளிக் கழிப்பிடங்களை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. அனைத்து வீடுகளிலும் அரசு சார்பில் கட்டப்படும் கழிப்பிடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கழிப்பிடங்களை முறையாக பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளிகளுக்கு குழந்தைகள் அனைவரையும் அனுப்ப பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
கிராம சபை கூட்டத்தில், மழைக்காலம் தொடங்கி விட்டதால் வரத்துவாரிகள் மற்றும் குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், அதனை தடுப்பதற்கு கிராம நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபை கூட்டம் முடிந்தவுடன் திடீரென மழை வந்தது, அப்போது மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களிடம் மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார். கிராம சபைக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.