குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா போட்டிகள்
பள்ளி மாணவர்களுக்கு கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் ஒப்புவித்தல் போட்டி,பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது
HIGHLIGHTS
புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளிப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளை நடத்தியது.
இதை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் ஒப்புவித்தல் போட்டி,பேச்சுப் போட்டி,மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் இருபதுக்கும் மேற்பட்டஅரசுமற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.போட்டிகளுக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் சோலச்சி ,பழனிச்சாமி ,ரமேஷ், மைதிலி, கீதாஞ்சலிமஞ்சன், ரேவதி, கவிஞர்கள் பீர்முகமது, சூர்யாசுரேஷ், யோகாபாண்டியன், ஓவியர் சித்ரகலாரவி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எதிர் வரும் 30.11.2022 அன்று நடைபெறும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பாராளுமன்ற மாநிலங்களை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா மற்றும் அழ.வள்ளியப்பாவின் குடும்பத்தினர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படும் என வாசகர் பேரவை தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ்,உதயகுமர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா (1922 - 1989) : தமிழ் குழந்தை இலக்கிய உலகின் பிதாமகர் என்று போற்றப்படுபவர். ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தம்முடைய எழுத்துத் திறமை அனைத்தையும் குழந்தை இலக்கியம் படைப்பதிலேயே செலவிட்டார். பல குழந்தை எழுத்தாளர்கள் உருவாகவும், வளரவும் முக்கிய காரணமாக இருந்தார். குழந்தைகளுக்கு எழுதுபவர்களை ஒன்று சேர்த்து 1950ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவினார். 16 ஆண்டுகளுக்கு மேலாக 5 சிறுவர் பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக இருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. உள்ளூரில் சு.கதி. காந்தி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றார். பிறகு ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் 11வது வகுப்பு வரையில் படித்தார்.தொடர்ந்து படிக்க முடியாததால் 1940 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார்.
"ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார்.சக்தியில் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.1941 -ல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -நவம்பரில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.1976ல் நடைபெற்ற குழந்தை இலக்கிய வெள்ளி விழாவில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் குழந்தை இலக்கியப் பணியைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்கள் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தார்.