முதலமைச்சர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்:அமைச்சர் ரகுபதி பேச்சு
மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழக முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
HIGHLIGHTS
தமிழக முதலமைச்சர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து 75வது சுதந்திர தின திருநாள் அமுத பெருவிழா நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் நிகழ்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நாட்டு நலத்திட்ட பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.
அதேபோல் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணி திட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவிகளை பாராட்டும் விதத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு சிறப்பாக நாட்டு நலப்பணி திட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் கல்லூரி மாணவிகளை பாராட்டினார்.
பின்னர் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: நமது மகளிர் கல்லூரி சகோதரிகள் மூன்று கிராமங்களை தத்தெடுத்து மிகச்சிறப்பாக நாட்டு நலப்பணித் திட்டங்களை செய்து வருவது பாராட்டுக்குரியது. நாட்டு நலப்பணித் திட்டம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொண்டு வருவதன் நோக்கம் மாணவர்கள் சமுதாயப் பணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும்.சமூகத்தில் அவர்களுக்கு அக்கறை உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் பல்வேறு துறைகளில் குறைகளைப் போக்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இன்றைக்கு நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே மாணவிகள் ஆகிய நீங்கள் கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள இருக்கிறீர்கள்.தற்போது கொரோனா வைரஸ் தொற்றியில் இருந்து நாட்டை காப்பாற்றும் தலையாய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால் தான் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக எடுத்துச் செல்ல முடியும்.
அதேபோல் சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபடுத்திக் கொள்வதன் அவசியத்தை நீங்கள் கிராமங்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்கள் அதுவும் பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும். இன்றைக்கு கிராமத்தை தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதேபோல் வீடு தேடி கல்வித் திட்டத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி கல்வியின் அவசியத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தமிழக முதலமைச்சர் என்கிற மாமனிதனுக்கு பின்னாலே நாங்கள் இருக்கின்றோம் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணையாக நிற்கின்றோம். தமிழகத்தை முன்னெடுத்து செல்வதற்கு நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைக்கு பாராட்டுதல் கூறிய ஒன்றாக இருக்கிறது.அதனை இளைய சமுதாயம் வரவேற்கிறது என்பதுதான் நீங்கள் கைகோர்த்து நிற்பதியின் நோக்கம் ஆக அமைந்து இருக்கிறது.
எனவே இன்றைக்கு எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நாள் முதல் இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.எப்படி சூரியன் 24 மணி நேரமும் சுற்றி சுழன்று வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறதோ அதேபோல தமிழக மக்களுக்கு வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றார். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கின்ற காரணத்தினாலேயே இன்றைக்கு பல்வேறு வகையான பேரிடர்களில் இருந்து நாம் காப்பாற்றப்பட்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையில் இருந்து காப்பாற்றபட்டோம். அதனைத் தொடர்ந்து தமிழகம் வரலாற்றில் கண்டிராத அளவுக்கு ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்தனையும் சமாளித்து மக்களை காப்பாற்றி உள்ளோம். இன்றைக்கு சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய எல்லாப் பொதுமக்களும் பாராட்டக் கூடிய அளவில் ஒரு காலகட்டத்தில் வெள்ளப்பெருக்கு என்று வந்துவிட்டால், தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முன்னால் சென்று உதவி செய்கின்ற காட்சியை நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் இன்று தமிழக முதலமைச்சரை வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நேரடியாக மக்களுக்கு உதவுகின்ற காட்சியை இன்றைக்கு நாம் கண்டுகொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
பெண்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். எனவே நீங்கள் நினைத்தால் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வைக்க முடியும். கிராமங்களில் உள்ள அத்தனை பொதுமக்களுக்கும் வீடு தேடி கல்வித் திட்டத்தில் இணைக்க முடியும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.